Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவேண்டும்: பள்ளிக் கல்வித்துறை

ஜனவரி 24, 2019 01:02

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. 
 
மாவட்ட தலைநகரங்களில் இன்றும் அரசு ஊழியர்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். 

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.  

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவு செய்ய இன்று மதியம் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.  

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 17 பி பிரிவின் கீழ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்